Tuesday, 10 June 2025

சாதிக்க விருப்பமா, அவமானப்படுங்கள்.


சாதிக்க விருப்பமா, அவமானப்படுங்கள்.

என்னை நானே யாரென்று புரிய எனக்குத் தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்!

இது உண்மை என்பது போல் அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.

அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கானப் படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.

நம்மை அவமானப்படுத்துவோரைப் பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம்.

நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள்.

ஏற்பட்ட அவமானங்களுக்காகக் குமைந்துக் கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.

நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.

"அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!"

நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?

உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்!

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… .‘நம்மை இவ்வளவு அவமானப்படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.

சோர்ந்துப் போகாதீர்

அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.

எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிடப் பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்துப் போய், அந்தக் காரியத்திலிருந்து விலகி விடுவது.

மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.

சாதிக்க விருப்பமா மனதைப் பக்குவபடுத்துங்கள்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment